காஷ்மீரில் 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை... மகிழ்ச்சி வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள்!
ஸ்ரீநகர்: காஷ்மீர் 11 மாதங்களுக்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
பனிகல்-பாரமுல்லா இடையே ஆரம்ப கட்டமாக ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியும், சுற்றுலாத்துறைக்கு ஊக்கமும் அளிக்கக் கூடியதாகும் என்று அவர் கூறினார்.
வழக்கமான அனைத்து ரயில் சேவைகளுக்கான தடை கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவை
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரயில் சேவை படிப்படியாக தொடங்கிய போதிலும், காஷ்மீரில் மட்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 11 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் நேற்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ளன.

சுற்றுலாத்துறைக்கு ஊக்கம்
இதனை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார் .இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ரயில் சேவை 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. பனிகல்-பாரமுல்லா இடையே ஆரம்ப கட்டமாக ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியும், சுற்றுலாத்துறைக்கு ஊக்கமும் அளிக்கக் கூடியதாகும்.

65% ரயில் சேவை
கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் எப்போது முதல் ரயில் சேவையை தொடங்குவது என்பதற்கு உறுதியான தேதி எதையும் நிர்ணயிக்க முடியாத சூழல் நிலவியது. இப்போது அடுத்தடுத்த கட்டமாக ரயில் சேவை அதிகரிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே 65 சதவீத ரெயில் சேவை இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் 250 ரெயில்கள் ஜனவரி மாதத்தில் மட்டும் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன.

மார்ச் வரை தடை இருக்கும்
இனி மேலும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது அனைத்தும் சிறப்பு ரயில்களாக, முன்பதிவு முறையில் இயக்கப்படுகின்றன. வழக்கமான அனைத்து ரயில் சேவைகளுக்கான தடை கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.