உத்தரகாண்ட்டில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை ஜோர்.. மக்கள் அதிர்ச்சி.. விசாரணை குழு அமைப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து பிளாஸ்டிக் அரிசி உண்மையில் விற்கப்படுகிறதா என்பது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்ட
டேராடூன்: சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலை போய், இப்போது இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுபோன்ற பிளாஸ்டிக் அரிசிகள் தனியாக விற்பனை செய்யப்படுவது கிடையாது. அவை உண்மையான அரிசியுடன் கலக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதனை அரிசியாக இருக்கும் போது கண்டுபிடிக்க முடியாது. சமைத்தால் மட்டுமே அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
இந்தியாவில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் நடந்தது என்பதை உறுதிசெய்யும் வகையில் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எல்லா மாநிலத்திலும் வலுவாக எழுந்துள்ளது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹால்ட்வானி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்து உள்ள விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்கெட்டில் அரிசி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்ட மக்கள் உணவின் ருசியில் மாற்றம் தெரிவதை உணர்ந்து உள்ளனர். இதற்கிடையே பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்ட சாதத்தை சிறார்கள் பந்தாக உருட்டி விளையாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக பேசிய மாவட்ட மாஜிஸ்திரேட் கே கே மிஸ்ரா, " பிளாஸ்டிக் அரிசி விசாரணை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவானது விசாரிக்கும். இதுதொடர்பாக அந்தக் குழு சோதனையில் ஈடுபடும், கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.