ஆந்திராவில் மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து! பலியானவர்களுக்கு பிரதமர் இரங்கல்.. நிவாரணம் அறிவிப்பு
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில், பாய்லர் வெடித்ததில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.
அனகாபள்ளியின், அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள, எசியன்ஷியா மருந்து நிறுவனத்தில் பாய்லரில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,

"இந்த சம்பவம் அணு உலை வெடித்ததால் நடந்தது அல்ல. ஆரம்பத்தில், ரசாயன உலையில் வெடிப்பு ஏற்பட்டதாக ஊடகத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்தில் மின்சாரம் தொடர்பான தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். காயமடைந்த சுமார் 30 பேர் அனகாபள்ளி மற்றும் அச்சுதாபுரத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும்,13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக என்டிஆர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என தெரிவித்திருக்கிறார்.
அதேபோல விபத்து குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் நிலைமை அமைதியாக உள்ளது. தொழிற்சாலை இரண்டு ஷிப்டுகளில் 381 ஊழியர்களுடன் செயல்பட்டுவருகிறது. மதிய உணவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், குறைந்தளவிலான ஊழியர்கள் பணியில் இருந்தனர்" என்று கூறியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதேநேரம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். இது குறித்து பிரதமர் அலுவலக x தள பதிவில்,
"அனகாபள்ளி தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. தங்கள் நெருங்கிய உறவுகளை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF-ல் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விபத்து நடந்த நிறுவனத்திற்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications