அஜ்மீர்-டெல்லி இடையே வந்தே பாரத் ரயில்.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி.. சிறப்பே இதுதான்! அடடே
ஜெய்ப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயில் 150 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க உள்ளதோடு, சதாப்தி எக்ஸ்பிஸ் ரயிலை ஒப்பிடும்போது அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் இடையேயான பயண நேரம் ஒருமணிநேரம் வரை குறைய உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று தான் வந்தே பாரத் ரயில் திட்டமாகும். நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வேகமாக இயங்கும் ரயில்களை உள்நாட்டில் தயாரிக்க வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து வந்தே பாரத் ரயில்கள் இயங்க தொடங்கி உள்ளன. தற்போது நாட்டில் 14 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. இதில் ஒன்று தான் சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலாகும். இந்த ரயில் சேவையை கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் இடையேயான புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் 150 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மரில் இருந்து டெல்லி வரையிலான 428 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 5 மணி 15 நிமிடங்களில் ரயில் கடந்து செல்லும். இதன்மூலம் சதாப்தி ரயிலை ஒப்பிடும்போது ஒருமணிநேர பயணம் குறையும். தற்போதைய வந்தே பாரத் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 86 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். நாளை முதல் அஜ்மீர் முதல் டெல்லி வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் வழக்கமான சேவை தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வந்தே பாரத் தொடக்க விழாவையொட்டி ஜெய்ப்பூர்-டெல்லி கண்டோன்மென்ட் இடையே மட்டுமே இயக்கப்பட்டது. இந்த ரயில் நாளை முதல் முறையாக அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் இடையே இயங்க உள்ளது. இந்த ரயில் ஜெய்ப்பூர், அல்வார், குருகிராம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிச்சிறப்பு என்பது இந்த வந்தேபாரத் ரயில் புஷ்கர் மற்றும் அஜ்மீர் தர்கா உள்ளிட்ட ராஜஸ்தானின் முக்கிய சுற்றுலாத் தலங்களின் இணைப்பை மேம்படுத்த உதவும்.

முன்னதாக இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது, ‛‛ வந்தே பாரத் ரயில் என்பது வளர்ச்சி, தன்னிறைவு பெறுதல், நவீனமயமாக்கல் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாகும். இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ராஜஸ்தான் மாநில சுற்றுலா துறைக்கு பெரிய அளவில் பயனளிக்கும். அதிர்ஷ்டம் என்னவென்றால் கடந்த 2 மாதங்களில் நான் தொடங்கி வைக்கும் 6வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். முந்தைய காலத்தில் சுயநலம் மற்றும் தவறான அரசியல் காரணங்களால் ரயில்வே துறை நவீனமயமாக்கல் என்பது நடைபெறவில்லை. ஊழல்களால் வளர்ச்சி என்பது முற்றிலும் தடைப்பட்டது'' என கூறினார்.












Click it and Unblock the Notifications