ராமர் சிலையை கருவறைக்கு எடுத்து செல்லும் பிரதமர் மோடி.. அயோத்தி கோவில் பிரதிஷ்டை எப்படி நடக்கும்?
அயோத்தி: 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த வேளையில் பிரதமர் மோடி ராமர் சிலையை கருவரைக்கு எடுத்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி தீர்ப்பு வழங்கி ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அயோத்தியில் 2.7 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 2020 பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையை உருவாக்கினார். அதன்பிறகு 2020 ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் பீடத்தின் மீது மூன்று அடுக்குகளாக ராமர் கோவில் அமைய உள்ளது. கோவிலின் பீடம் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் 5 மண்டபங்கள் அமைகிறது. கோவிலில் மிக உயரமான சிகரம் என்பது கர்ப்பகிரஹத்திற்கு மேல் இருக்கும்.
அதோடு கலைநுட்பத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், கற்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. ராமர் கோவிலின் பிரதிஷ்டை விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான அழைப்பிதழ் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி வழங்கப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலை பிரதிஷ்டை செய்ய உள்ளார். அதன்பிறகு கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடி பங்கேற்கும்போது அங்கு தற்காலிக இடத்தில் இருக்கும் ராமர் சிலையை அங்கிருந்து எடுத்து வந்து புதிய ராமர் கோவில் கருவறையில் வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது சுமார் 500 மீட்டர் தூரம் ராமர் சிலையை பிரதமர் மோடி எடுத்து செல்ல உள்ளார். இதற்கான பணியை அறக்கட்டளை நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் ஜனவரி 22ம் தேி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் முக்கிய பூஜைகள் நடைபெற உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து அர்ச்சகர்கள், இந்து மத சம்பிரதாயங்கள் முறையில் ராமர் சிலைபிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மேலும் கோவில் கர்ப்பகிரஹகத்துக்குள் வைக்க 3 வகையான ராமர் சிலை செய்யும் பணியை கோவில் அறக்கட்டளை தீவிரமாக செய்து வருகிறது. அதில் எந்த சிலையை கர்ப்பகிரஹத்தில் வைப்பது என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்பவில்லை.
ராஜஸ்தான் மார்பிள் அல்லது கர்நாடகா கிரானைட் கற்களால் செய்யப்படும் ராமர் சிலையில் ஒன்றை கர்ப்ப கிரஹத்தில் வைக்கப்படும் என கூறப்படுகிறது. மற்றொரு சிலையானது 2வது தளத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த பிறகு அங்கு வைக்கப்பட உள்ளது. 2வது தளத்தில் தான் ராமர் தர்பார் அமைக்கப்படும். கோவில் திறப்பு விழாவையொட்டி சரயு உள்ளிட்ட பிற புனித நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது.

இந்த விழாவுக்கு இந்தியாவில் இருந்து ஆன்மிக தலைவர்கள், மடாதிபதிகள், பாஜக தலைவர்கள், பிற அரசியல் கட்சியினர் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 136 சனாதன பாரம்பரியங்களை சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதுதவிர, 10,000 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்பார்கள் என்றும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications