தீபத் திருநாளில் மக்கள் மனதில் நம்பிக்கை ஒளியேற்ற ஸ்ரீநகர் சென்ற மோடி
ஸ்ரீநகர்: தீபாவளி பண்டிகையான இன்று பிரதமர் நரேந்திர மோடி சியாச்சின் போர்முனைக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு ஸ்ரீநகருக்கு வந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனி விமானம் மூலம் உலகிலேயே உயரமான போர்க்களமான சியாச்சின் சென்றார். அங்கு அவர் ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். அவர்களுடன் சில மணிநேரம் இருந்த மோடி தனி விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு மதியம் 2.10 மணிக்கு வந்தார்.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் ஓஹ்ரா, முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். அவர் ராஜ் பவனில் வைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.
மேலும் அவர் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக் பகுதிக்கு அவர் செல்கிறார். மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை அவர் பார்வையிடுகிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கி இருக்கும் நிவாரண முகாமிற்கும் மோடி செல்கிறார்.