மோடி பேச்சில் வல்லவர் தான், ஆனால் செயலில் தான்...: சசி தரூர்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பேச்சாற்றல் மிக்கவர். ஆனால் அவர் பேச்சை செயலில் காட்ட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் பிரதமர் நரேந்திர மோடியை அவ்வப்போது புகழந்து பேசி வருகிறார். இப்படி மோடியை புகழ்து பேசியதால் தான் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியை இழந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது மோடி பற்றி கூறுகையில்,
மோடி பேச்சாற்றல் மிக்கவர். அவர் திறமையாக பேசி வருகிறார். இந்த அரசின் பலமே அவரது பேச்சு தான். செயல் வீரருக்கு தான் வாக்களித்துள்ளோம் என்று மக்கள் நினைத்தார்கள். அவர் நன்றாக பேசுகிறாரே தவிர செயலில் அதை காட்டுவதாக தெரியவில்லை. அவர் கூறுவதை செயலில் காட்ட வேண்டும்.
எனக்கு பாஜகவில் சேரும் எண்ணம் இல்லை. நான் காங்கிரஸ்காரனாகத் தான் இருப்பேன். மோடி அரசில் பேச்சுக்கும், செயலுக்கும் இடையே உள்ள இடைவெளியில் ரதத்தையே விடலாம்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்பின் தலைவர்களின் செயல் பிரிவினையை ஏற்படுத்துவதாக உள்ளது. அமைச்சர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சரி இல்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் கோட்சேவை புகழந்து கொண்டு, பெண்கள் எத்தனை குழந்தைகள் பெற வேண்டும் என்று பேசக் கூடாது. உங்கள் கட்சி இந்துத்துவத்தை தான் போதிக்கிறது.
இந்த விவகாரங்களில் மோடி அவர்களை பேசாமல் இருக்குமாறு கூறாமல் அவர் மௌனமாகிவிட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications