"உங்களை மிஸ் பண்றேன் மா".. தாயைக் கொன்று ஸ்டேட்டஸ் வைத்த மகன்.. குஜராத்தில் நடந்த கொடூரம்
குஜராத்: குஜராத் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வாக்குவாதம் ஏற்பட்டதில் கடும் ஆத்திரமடைந்த மகன் தாயைக் கொன்று, சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்த கொலையாளியைக் கைது செய்துள்ளனர்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் கைவிட்ட நிலையில், 21 வயது இளைஞரும், மனநலம் பாதிக்கப்பட்ட தாயும் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், மகன் தாயைக் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே உயிரிழந்த பெண்ணின் சடலத்தைக் கூட அவர்களது உறவினர்கள் வாங்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள பகத்சிங்ஜி தோட்டத்தைச் சேர்ந்தவர் நிலேஷ் கோசாய் (21). இவரது தாய் ஜோதிபென் கோசாய். ஜோதிபென்னுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரது கணவரும், மற்ற குழந்தைகளும் அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நிலேஷ் கோசாயும், ஜோதிபென் கோசாயும் சேர்ந்து தனியாக வசித்து வந்துள்ளனர்.
ஜோதிபென்னுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் நிலேஷுக்கும், ஜோதிபென்னுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுமாம். சில நேரங்களில் வாக்குவாதம் முற்றி அடிதடியில் கூட முடிந்து வந்துள்ளது. இந்நிலையில், நிலேஷுக்கும், ஜோதிபென்னுக்கும் நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் நிலேஷ் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, வாக்குவாதம் உச்சமடைந்த நிலையில் நிலேஷ் ஜோதிபென்னை கத்தியால் குத்துவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால், ஜோதிபென் அவரைத் தடுத்துள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த நிலேஷ் அவரது கழுத்தை போர்வையால் நெரித்துள்ளார். இதில், ஜோதிபென் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தாயைக் கொன்றுவிட்டு நிலேஷ் செய்வதறியாது தவித்துள்ளார். பின்னர், தனது தாயைக் கொன்று விட்டதாக சமூக ஊடகத்திலும் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அம்மா நான் உங்களைக் கொன்றுவிட்டேன். அதனால் என் வாழ்க்கையையே இழந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. உங்களை மிஸ் செய்கிறேன் அம்மா. ஓம் சாந்தி.' என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் நிலேஷின் பதிவை அவரது உறவினர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, நிலேஷின் சமூக ஊடகப் பதிவைக் காவல் துறையிடம் கொண்டு சென்று காண்பித்துள்ளார். இதையடுத்து, நிலேஷின் வீட்டுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ஜோதிபென்னின் சடலத்துடன் நிலேஷ் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, நிலேஷ் கோஷாயை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜோதிபென் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு மருந்துகள் கொடுப்பது வழக்கம். ஆனால், கடந்த சில நாள்களாக மருந்துகளை சாப்பிடாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் ஜோதிபென்னின் மனநலம் மிகவும் மோசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், நிலேஷுக்கும், ஜோதிபென்னுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றி அவரை கத்தியால் குத்த முயன்றதாகவும், அப்போது அவர் நிலேஷை தடுத்ததாகவும், இதையடுத்து போர்வையால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் போலீஸிடம் நிலேஷ் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடரந்து, நிலேஷிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிபென்னின் சடலத்தைப் பெற்றுக் கொள்ள அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட தாயும், மகனும் மட்டும் வாழ்ந்து வந்த நிலையில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications