அமைச்சரின் “ஷூ லேசை” கட்டி விட்ட பாதுகாப்பு அதிகாரி... எதிர்கட்சிகள் கண்டனம்
மேற்கு வங்கம்: திரிணாமுல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ஒருவரின் ஷு கயிறை அவரின் பாதுகாப்பு காவலர் ஒருவர் கட்டி விட்டது மேற்குவங்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசில் திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளவர் ரச்பால் சிங். மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்ற அவர், ராம்கிங்கர்பெய்ஜ் என்ற கலைஞரின் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது ஷுக்களை கழற்றி விட்டு மாலை அணிவித்தார்.
பின்னர் மீண்டும் தனது ஷுக்களை அவர் அணிய முயன்ற போது, அவரது பாதுகாப்பிற்கு வந்த காவலர் ஒருவர் ஓடோடி வந்து அமைச்சரின் ஷூ லேசை பவ்யமாக குனிந்து கட்டிவிட்டார்.
இதனை அங்கு வந்த செய்தியாளர்கள் படம் பிடித்து வெளியிட்டு விட்டனர். இதையடுத்து, தனது ஷூ லேசை காவலர் ஒருவர் கட்டிவிட அனுமதித்த அமைச்சருக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
எளிய வாழ்க்கை வாழ்வதாக கூறிக் கொள்ளும் மம்தாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவரே இத்தகைய செயலை செய்துள்ளார் என்று எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இத்தனைக்கும் சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் ரச்பால் சிங் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications