புதிய பிரதமராக மோடி நியமனம்! ஆட்சி அமைக்க அழைத்தார் ஜனாதிபதி!!
டெல்லி: நாட்டின் புதிய பிரதமராக பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நியமித்து மே 26-ந் தேதியன்று புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் நரேந்திர மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டத்திலும் மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ராஜ்நாத்சிங் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் 15 பேர் அடங்கிய குழு முதலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தது.
அப்போது பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதியிடம் ராஜ்நாத்சிங் வழங்கினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து நரேந்திர மோடி ஜனாதிபதியை தனியே சந்தித்தார்.. அப்போது தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மோடிக்கு பூங்கொத்து கொடுத்து ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமராக மோடி நியமனம்- ஆட்சி அமைக்க அழைப்பு!
பின்னர் ஜனாதிபதியிடம் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை முறைப்படி கோரினார் நரேந்திர மோடி. இதைத் தொடர்ந்து நரேந்திர மோடியை புதிய பிரதமராக நியமித்தார் ஜனாதிபதி.
மேலும் மே26-ந் தேதியன்று ஆட்சி அமைக்கவும் ஜனாதிபதி முறைப்படி அழைப்பும் விடுத்துள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, வரும் 26-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்க இருப்பதாக தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி மாளிகை செயலர், நரேந்திர மோடியை நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications