15–வது லோக்சபா கலைப்பு - புதிய எம்.பி.க்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் தேர்தல் ஆணையம் கொடுத்தது!
டெல்லி: நாட்டின் 15-வது லோக்சபா அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. புதிய எம்.பி.க்கள் பட்டியலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தேர்தல் ஆணையம் வழங்கியது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில் 16-வது லோக்சபாவுக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை கடந்த 16-ந் தேதி நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 543 புதிய எம்.பி.க்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்தது.
இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் நேற்று சந்தித்து 543 புதிய எம்.பி.க்களின் பட்டியலை வழங்கினார். அப்போது தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ். பிரம்மா, நசீம் ஜெய்தி ஆகியோர் உடனிருந்தனர்.
லோக்சபா கலைப்பு
முன்னதாக, பதவி விலகிய பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, 15-வது லோக்சபாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலைத்து நேற்று உத்தரவிட்டார்.
புதிய எம்.பி.க்கள் பட்டியலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தேர்தல் ஆணையம் வழங்கியதைத் தொடர்ந்து புதிய லோக்சபாவையும் அரசையும் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கி விடும்.












Click it and Unblock the Notifications