மலை கோயிலில் சாமியாடிய பூசாரி.. கால் தவறி 100அடி உயரத்திலிருந்து விழுந்து பலி.. பதற வைக்கும் வீடியோ
அனந்தபூர்: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள மலைக் கோயிலில் அதன் முகடுகளில் நின்று பூஜை செய்த போது பூசாரி கால் தவறி விழுந்து பலியான காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
அனந்தபூர் மாவட்டத்தில் சிங்னமலா மண்டலத்தி உள்ளது ஆனந்தராவ் பேட்டை. இங்கு கம்பமல்லையா சுவாமி திருக்கோயில் உள்ளது.
மலை உச்சியில் உள்ள குகைக் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படும். இந்த கோயிலின் பூசாரி அப்பா பாப்பையா (49), சிறப்பு பூஜைகளை செய்து திருவிழாவை நடத்தி வைப்பார்.

வழக்கமான பூஜை
பாரம்பரியப்படி வழக்கமான பூஜையை செய்தார் பாப்பையா. அப்போது மலை முகடுகளில் நின்ற அவருக்கு அருள் வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆவேசமாக சாமியாடிய பாப்பையா, திடீரென ஒரு காலை எடுத்து இன்னொரு முகடுக்கு வைக்கும் போது எண்ணெய் பசையால் வழுக்கி இரு முகடுகளுக்கு நடுவில் உள்ள சிறிய பள்ளத்தில் ஒரு காலை வைத்தார்.

நிலைத்தடுமாறி மலையிலிருந்து
இதனால் நிலைத்தடுமாறி மலையிலிருந்து கீழே விழுந்தார். பாறைகளில் மோதி பல முறை உருண்டு விழுந்த அவரை அங்கிருந்த மக்கள் மீட்க போராடினர். ஆனால் அதிக காயமடைந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பக்தர்கள் நேரில் கண்டதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நெஞ்சம் பதறுகிறது
இவர் விழுந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. பார்க்கவே நெஞ்சம் பதற வைக்கும் வகையில் உள்ளது. இவர் இது போல் ஆண்டுதோறும் இந்த மலைக் கோயிலில் பூஜை செய்வாராம். செங்குத்தான மலையில் நின்றதால் எண்ணெய் படிந்த பாறையில் கால் வைத்ததால் வழுக்கி விழுந்தார்.

100 அடி உயரம்
சுமார் 100 அடி உயரத்திலிருந்து விழுந்த அவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவரது தாத்தாவும் இதே போல் பூஜை செய்யும் போது மலையிலிருந்து இடறி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications