பிரியங்கா காந்தி சென்ற விமானத்தில் ‘பாம்’... கிலி கிளப்பிய தொழிலதிபர் கைது!
டெல்லி: தனது மகளின் விளையாட்டைப் பார்ப்பதற்காக புதுவை புறப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தி பயணம் செய்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பிய தொழிலதிபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான சப் ஜூனியர் கூடைப் பந்து போட்டி வருகின்ற 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 25 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகளில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பேரக் குழந்தைகளும், பிரியங்கா வதேராவின் குழந்தைகளுமான ரோகன் வதேரா, நீராயா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதற்காக, தனிப்பட்ட முறை பயணமாக பிரியங்கா காந்தி தனது மகளுடன் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தார். அதன் பின்னர், அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி கடற்கரை சாலை பழைய நீதிமன்றம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு அவர் சென்றார்.
முன்னதாக பிரியங்கா சென்னை வருவதற்காக டெல்லி விமான நிலையம் சென்ற போது அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, சென்னை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அதில் பயணம் செய்ய இருந்த தொழிலதிபர் ஒருவர் போலீசில் தெரிவித்துள்ளார்.
அதோடு, அந்த வெடிகுண்டை வெடிக்க வைப்பதற்கான கருவி தன்னிடம் இருப்பதாகவும், தான் அதனை இயக்கினால் விமானம் வெடித்து விடும் எனவும் அவர் மிரட்டியுள்ளார்.
இதனால் விமான நிலையத்தில் பீதி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் நகைச்சுவைக்காக அவ்வாறு கூறியது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த விமானம் சென்னை புறப்பட்டுச் சென்றதாக டெல்லி விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications