எங்க குடும்பத்துக்கு விமான நிலையத்தில் சலுகைகள் காட்டவே வேண்டாம்: பிரியங்கா
டெல்லி: விமான நிலையங்களில் தனக்கும், தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை திரும்ப பெற வேண்டும் என சிறப்பு பாதுகாப்பு படை தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா மற்றும் அவரது கணவர் வதேரா ஆகியோர் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால், நாட்டிலுள்ள எந்த விமான நிலையங்களிலும் அவர்களுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லை.

இந்நிலையில், சமீபத்தில் புதிய விமான போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற கஜபதி ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும், விமான நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு விலக்கானவர்கள் அல்ல. அது போல வதேராவும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டே ஆக வேண்டும். அதற்கு ஏதுவாக அவரது பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, பிரியங்கா தானாக முன்வந்து, தனக்கும் தனது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் குழந்தைகளுக்கு, விமான நிலையங்களில் வழங்கப்படும் சலுகைகள் தேவையில்லை என்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், விமான நிலையத்தில் வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும். பாதுகாப்பை நாங்கள் கேட்கவில்லை. அவர்களாகவே வழங்கினர். தனியாக செல்லும் போது எனது கணவர் சோதனை செய்யப்படுகிறார். இந்நிலையில் விலக்கு அளிக்கப்படும் போது, அவருக்கு சங்கடமாக உள்ளது. முன்னரே விலக்கு அளிக்க வேண்டும் என கூறியுள்ளேன்.
நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் போது, பயணிகளுக்கு இடையூறு இன்றி இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். எனது கணவருக்கு உள்ள பாதுகாப்பை விலக்க வேண்டும் என கருதும் போது, எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அளிக்கப்படும் பாதுகாப்பையும் விலக்கி கொள்ள வேண்டும். நானும், எனது கணவரும் வழக்கம் போல், விமான நிலையங்களுக்கு செல்வோம். என்னுடன் வரும் போது வதேராவை சோதனை செய்யமால் இருக்க நாங்கள் கோரிக்கை விடவில்லை என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications