4 நாய்க்குட்டிக்கு அடைக்கலம் கொடுத்த தாய், மகளை கொலவெறியில் தாக்கிய நபர்: வீடியோ
புனே: புனேவில் தெருவில் சுற்றித்திரிந்த 4 நாய் குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தாய் மற்றும் மகளை ஒருவர் தனது காலணியால் தாக்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே கோத்ருட் பகுதியில் உள்ள மகாத்மா குடியிருப்பு சொசைட்டியில் வசித்து வருபவர்கள் செஜால் சாராப் மற்றும் அவரின் தாய் சோனாலி. அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நான்கு குட்டிகளை போட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் நாய் இறந்துவிட்டது.
இதனால் குட்டிகள் பசியால் வாடியதை பார்த்த செஜால் மற்றும் சோனாலி அவைகள் மீது பாவப்பட்டு வீட்டிற்கு தூக்கி வந்தனர்.
நாய்க்குட்டிகளால் சொசைட்டியில் வசித்து வரும் மிலிந்த் காலே(45) என்பவர் ஆத்திரம் அடைந்து அவைகளை வந்து எடுத்துச் செல்லுமாறு முனிசிபாலிட்டி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்தபோது நாய்க்குட்டிகளை தர செஜாலும், சோனாலியும் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து மிலிந்த் தாய் மற்றும் மகளுடன் தெருவில் வைத்து சண்டை போட்டார். மேலும் தனது ஷூவை கழற்றி செஜால் மற்றும் சோனாலியை சரமாரியாக தாக்கினார்.
மேலும் கையாலும் அவர்களின் தலைகளில் ஓங்கி ஓங்கி அடித்தார். அவர் தாக்கியதில் செஜாலின் பல் உடைந்தது. இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் செஜால் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மிலிந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தனர். மிலிந்தை ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.