உலக புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலய தேரோட்டம்.. வடம் பிடித்து இழுக்கும் 1500 பேருக்கு கொரோனா டெஸ்ட்
புவனேஸ்வர்: கொரோனா பரவலால், ஒடிசாவின், பூரி நகரின் புகழ்பெற்ற ஜெகன்நாதர் ரதயாத்திரை நிறுத்தப்பட வேண்டாம் என்றாலும், பக்தர்களை பங்கேற்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியது.
பூரி தேரோட்டம் ஜூன் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளது. ஜெகன்நாதர் ரத யாத்திரையின் போது ரதங்களை இழுக்க உள்ள அனைவருக்கும் கட்டாய கோவிட் -19 பரிசோதனை செய்து நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஒடிசா அரசு, திங்கள்கிழமை, பூரியில் ஒரு பெரும் கொரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொண்டது.

புகழ் பெற்ற பூரி ரத யாத்திரையில் மொத்தம் மூன்று ரதங்கள் உள்ளன. பகவான் ஜெகன்நாதரின் நந்திகோஷ், பாலபத்ராவின் தலத்வாஜா மற்றும் தேவி சுபத்ராவின் தர்பதலன் ஆகியவை இந்த ரதங்களாகும்.
ஒரு தேரை இழுக்க ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, எனவே, மூன்று ரதங்களை இழுக்க மொத்தம் 1500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பரிசோதனை நடைபெற்றது.
இதற்கிடையில், ஒடிசா அரசுங்கம் பூரிக்கான அனைத்து நுழைவு வாயில்களையும் சீல் வைத்துள்ளது. ரத யாத்திரை ஏற்பாடு நோக்கத்திற்காக தவிர வேறு எந்த வாகனமும் பூரி நகரத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், இதுபற்றி கூறுகையில், கொரோனா பரவலுக்கு மத்தியில், பூரியில் ஜெகன்நாதரின் ரத யாத்திரையை நடத்துவது பெரிய சவால் என்றும், பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளுக்கும், பொது சுகாதாரத்திற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த உதவ வேண்டும் என்றும் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.












Click it and Unblock the Notifications