தேசிய கொடிக்கு 'சல்யூட்' அடிக்காத துணை குடியரசு தலைவர் அன்சாரி...வறுத்தெடுக்கும் வலைவாசிகள்!
டெல்லி: குடியரசு தின விழாவின்போது தேசிய கொடிக்கு சல்யூட் அடிக்காமல் நின்றிருந்த துணை குடியரசு தலைவரும், ராஜ்யசபா தலைவருமான ஹமீத் அன்சாரி மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
டெல்லியில் இன்று நடந்த குடியரசு தின விழாவில், தேசிய கொடியேற்றப்பட்டதும், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, விழா மேடையில் இருந்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திரமோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், சிறப்பு விருந்தினரான அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிட்சேல் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

விழா மேடையில் இருந்ததில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மற்றும் ஹமீத் அன்சாரி ஆகியோர் மட்டும், சல்யூட் அடித்தபடி நிற்காமல், சாதாரணமாக நின்று கொண்டிருந்தனர். பிரணாப், மோடி உள்ளிட்ட பிறர் கையை நெற்றியில் வைத்து, தேசிய கொடியை பார்த்து சல்யூட் அடித்தபடி நின்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தேசிய கொடிக்கு, அமெரிக்கர் மரியாதை செலுத்த வேண்டியது அவசியமில்லை என்றபோதிலும், இந்தியரும், துணை ஜனாதிபதியுமான ஹமீத் அன்சாரி அவ்வாறு நின்றது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை ஈர்த்துள்ளது. உடனடியாக அன்சாரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பலரும் டிவிட் செய்து வருகின்றனர். ஹமீத் அன்சாரி பெயர், தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆகிவருகிறது. பலரும் ஹமீத் அன்சாரி சார்ந்த மதத்தை சுட்டிக் காட்டி, இந்தியாவின்மீது மரியாதை வைக்காததற்கு அதுதான் காரணம் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதேநேரம், சிலர் ஹமீத் அன்சாரிக்கு ஆதரவாகவும் டிவிட் செய்துவருகின்றனர். எழுந்து நின்றதே போதுமானது. சல்யூட் தேவையில்லை என்பது அவர்கள் வாதம்.












Click it and Unblock the Notifications