மாபெரும் மோசடி நடந்துள்ளது.. ஏன் அமைதி காக்கிறார் மோடி.. ராகுல் காந்தி ஆவேசம்
Recommended Video
டெல்லி: ரபேல் விமான விவகாரத்தில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. இந்த புகாரை உண்மை என்று தெளிவுபடுத்தியுள்ளார் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே. ஏன் இன்னும் பிரதமர் மோடி மெளனமாக இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது ஹோலண்டேவின் பேட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமர் மோடியை கடுமையாக அவர் தாக்கிப் பேசினார். பிரதமரை திருடன் என்றும் மீண்டும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறினார்.
ராகுல் பேட்டியிலிருந்து:
ஹோலண்டே கூறியுள்ள தகவல் மிகப் பெரியது. நமது பிரதமரை பொய்யர் என்று கூறியுள்ளார் ஹோலண்டே, திருடன் என்று கூறியுள்ளார். பிரதமர் இதற்கு பதில் அளிக்க வேண்டும். நாட்டுக்கு அவர் பெரும் துரோகம் இழைத்து விட்டார். படை வீரர்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்.
ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு ஹோலண்டேவும், மோடியும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போதுதான் அனில் அம்பானியைப் பரிந்துரைத்துள்ளார் பிரதமர் மோடி. அதன் பிறகுதான் ஒப்பந்தம் ரிலையன்ஸுக்குப் போயுள்ளது.
ரூ. 30,000 கோடி கிப்ட் மோடி, அனில் அம்பானி இடையே பரிமாறப்பட்டுள்ளது. ஹோலண்டே பொய் சொல்கிறாரா அல்லது அவர் சொல்வது உண்மையா என்பதை பிரதமர்தான் விளக்க வேண்டும். ஆனால் அவர் ஏன் அமைதியாக இருக்கிறார். நாட்டின் காவலனே திருடன் என்ற எண்ணம்தான் தற்போது மக்களிடையே நிலவுகிறது.
நடந்துள்ள மோசடி கிட்டத்தட்ட நிரூபணமாகி விட்டது. இனியம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. பிரதமர்தான் விளக்கம் தர வேண்டும் என்று கூறினார் ராகுல் காந்தி.