காங். இளவரசர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போல பேசுகிறார்: மோடி குற்றச்சாட்டு
பாட்னா: காங்கிரஸ் கட்சியின் இளவரசரான ராகுல்காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மற்றவர்களைக் குற்றம் சாட்டுகிறார், ஆனால் அவரது அரசின் ஊழல் குறித்துக் கேட்டால் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போல பதிலளிக்க மறுக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி.
16வது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்ட நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று குஜராத் முதல்வடும், பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திரமோடி, பீகார் மாநிலம் புர்னியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, மோடி தனது உரையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை ‘இளவரசர்' என குறிப்பிட்டார். ராகுல் தொடர்பாக அவர் பேசியதாவது:-

விளக்கமளிக்க வேண்டும்....
காங்கிரஸ் இளவரசர், நாடு முழுவதும் சுற்றிச்சுற்றி போதனையும், உபதேசமும் செய்கிறார். அவர் ஏதோ செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போல, மற்றவர்களை குற்றம் சாட்டுகிறார். அவர் முதலில், மத்திய அரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். அந்த அரசு, அவரது கட்சியினுடையதா? இல்லையா? என்று விளக்க வேண்டும்.

பதில் அளிப்பது இல்லை...
மத்திய அரசின் ஊழல் பற்றியோ, வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, விலைவாசி பற்றியோ கேள்வி கேட்டால், அவர் பதில் அளிப்பது இல்லை. அவர் குற்றம் சாட்டுவதோடு சரி, பதிலே அளிப்பது இல்லை.

மின்சாரம் இல்லையே....
காங்கிரஸ் இளவரசர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் செல்போனும், கம்ப்யூட்டரும் இலவசமாக அளித்தாக கூறுகிறார். ஆனால், அவற்றை ‘சார்ஜ்' செய்ய மின்சாரம் கொடுத்தாரா? அவருக்கு இந்தியாவின் எதிர்காலத்தில் எந்த அளவுக்கு அக்கறை உள்ளது என்று கேட்க விரும்புகிறேன்.

71% கம்யூட்டர்கள்...
தேசிய அளவில், பள்ளிகளில் 22 சதவீத கம்ப்யூட்டர்தான் உள்ளன. ஆனால், நீங்கள் எதற்கெடுத்தாலும் குற்றம் சாட்டும் குஜராத்தில் உள்ள பள்ளிகளில் 71 சதவீத கம்ப்யூட்டர்கள் உள்ளன.

ஆகாஷ் டேப்லெட்டுகள் எங்கே...?
மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், ஏதோ அவர்தான் அறிவுக்கே பிறப்பிடம் போல நினைத்துக்கொள்கிறார். ‘ஆகாஷ்' டேப்லெட்டுகள் எங்கே போயின என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். அதற்கான பணம் எங்கே போனது?

நிதீஷின் கர்வம்...
பீகார் முதல்வர் (நிதிஷ்குமார்), பிரதமர் ஆகும் நினைப்பில் இப்போது சரியாக தூக்கம் வராமல் தவிக்கிறார். அவரது ஆணவம், எவரெஸ்ட் மலைச்சிகரத்தை விட உயர்ந்தது. பிரதமர் பதவிக்கு தன்னைப்போல திறமையானவர் உலகத்திலேயே யாரும் இல்லை என்று அவர் கருதுகிறார்.

பிரதமர் உடை கூட தயார்...
3-வது அணி என்பது, முன்னாள் பிரதமர்களையும், பிரதமர் பதவி மீது ஆசை கொண்ட டஜனுக்கு மேற்பட்ட தலைவர்களையும் கொண்டது. அந்த அணியில் உள்ள தலைவர்கள் பலர், பிரதமர் பதவியை ஏற்பதற்காக, உடை எல்லாம் தைத்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்.

திரும்ப தூங்கிவிடுவார்கள்...
அவர்கள் தேர்தல் நேர சத்தத்தால் முழித்து விட்டனர். தேர்தல் முடிந்தவுடன், தூங்கப் போய்விட்டு, அடுத்த தேர்தல் வரும்போதுதான் கண் விழிப்பார்கள்.

அழுதார்களா...?
அவர்கள், பீகாரில் கோசி நதி வெள்ளப்பெருக்கால் மக்கள் மடிந்தபோது வந்தார்களா? கண்ணீர் சிந்தினார்களா?' என இவ்வாறு நரேந்திரமோடி வினா எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications