ஐஎஸ்ஐ பேச்சுக்காக முஸ்லீம்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்- ஜெயராம் ரமேஷ்
டெல்லி: முசாபர் நகர் கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர், முசாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுடன் ஐஎஸ்ஐ தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்த கருத்து தவறானது. இதற்காக அவர் முஸ்லீம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளதால் காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், முஸ்லீம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசவில்லை. அந்த எண்ணத்திலும் அவர் இல்லை. இருப்பினும் ஐஎஸ்ஐ குறித்தும், முசாப் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்களுடன் ஐஎஸ்ஐ தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர் கூறிய கருத்துக்கள் முஸ்லீம் சமுதாயத்தினரை புண்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனவே இதற்காக ராகுல் காந்தி வருத்தம் அல்லது மன்னிப்பு கேட்பதில் தவறில்லை.
மனதளவிலும், செயல் அளவிலும் ராகுல் காந்தி ஒரு மதச்சார்பற்ற தலைவர். யாரும் அந்த வகையில் அவரை சந்தேகப்பட முடியாது. அவரது மதச்சார்பின்மையை யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. சிறுபான்மையினருக்காக உண்மையாக கவலைப்படுபவர் ராகுல் காந்தி. தலித்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் மீது உண்மையான அக்கறையுடன் இருப்பவர் ராகுல் காந்தி.
பிரிவினைவாத சக்திகளால் இன்று நாட்டின் மதச்சார்பின்மை தத்துவத்திற்கு ஆபத்து வந்துள்ளது. இந்து ராஷ்டிரமாக இந்தியாவை மாற்ற ஆர்எஸ்எஸ் முயல்கிறது. அதற்கு யாரும் பலியாகி விடக் கூடாது என்றார் ரமேஷ்.