வருத்தம் தெரிவித்தார் ராகுல்.. சிவராஜ்சிங் சவுகான் மகன் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் அதிரடி
ஜெய்ப்பூர்: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சிங் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ராகுல் காந்தி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான். இவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக உள்ளார். விவசாயத்துறையை நிர்வகித்து வருகிறார்.

சிவராஜ்சிங் சவுகானின் மகன் பெயர் கார்த்திகேய சிங். இந்நிலையில் தான் கார்த்திகேய சிங் குறித்த ராகுல் காந்தியின் பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
அதாவது கடந்த 2018 ல் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். ஜாபு பகுதியில் நடந்த பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது பனாமா பேப்பர் கசிந்த ஊழல் வழக்கில கார்த்திகேய சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக கூறினார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி கார்த்திகேய சிங் சார்பில் போபாலில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் வழங்கியது. நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. ஆனால் ராகுல் காந்தி ஆஜராகவில்லை. வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரியும் மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தை ராகுல் காந்தி நாடினார். இந்த வழக்கை இன்று நீதிபதி பிரமோத் குமார் விசாரித்தார்.
அப்போது வழக்கு தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்திருந்தார். குறிப்பாக தன்னுடைய பேச்சு கார்த்திகேய சிங்கை தொடர்புபடுத்தியது இல்லை என்று விளக்கமும் அளித்து இருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கீழமை நீதிமன்றத்தில் இருந்து வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிராக கார்த்திகேய சிங் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இது ராகுல் காந்திக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. இருப்பினும் ராகுல் காந்தியின் இந்த செயலை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பாஜக ஐடி விங்க் தலைவர் அமித் மாளவியா, ''ராகுல் காந்தி தனது பெயரில் ஒரு பகுதியில் 'சாரி' என சேர்த்து கொள்ளலாம். அவதூறான மற்றும் பொறுப்பற்ற கருத்துகளுக்காக அவர் எத்தனை முறை மன்னிப்பு கோரியுள்ளார், வருத்தம் தெரிவித்துள்ளார் அல்லது தனது கருத்தை திரும்ப பெற்றுள்ளார் என்பதை பாருங்கள். அதனை கணக்கிடவே முடியாது'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications