காங்கிரசில் புதிய செய்தித்தொடர்பாளர்கள் : மீடியாக்களை கவர ப.சிதம்பரம்,சசி தரூருக்கு பதவி
டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்குவதை அடுத்து மீடியாக்கள் மூலம் மக்களை சந்திக்க தமிழக காங்கிரஸ் கட்சி தயாராகிவிட்டது. இதையடுத்து அக்கட்சியின் புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூத்த செய்தித் தொடர்பாளராக, மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமின்றி, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா, கட்சியின் பொதுச் செயாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரும் மூத்த செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சசி தரூர், அபிஷேக் சிங்வி, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 13 பேர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பீட்டர் அல்போன்ஸ், அமெரிக்கை நாராயணன், மாணிக் தாகூர், ஜோதிமணி ஆகியோர் தமிழகத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியின் இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.