பட்ஜெட் 2018: டிஜிட்டல் மயமாகும் ரயில் நிலையங்கள் - வை-பை, சிசிடிவி காமிரா வசதியுடன்!
நாட்டில் உள்ள ரயில்நிலையங்களில் படிப்படியாக வை-பை மற்றும் சிசிடிவி காமிரா வசதி அமைக்கப்படும் என நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: நாட்டின் அனைத்து ரயில்நிலையங்களிலும் படிப்படியாக வை-பை மற்றும் சிசிடிவி காமிரா வசதி அமைக்கப்படும் என நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றதில் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் ஜேட்லி, ஸ்மார்ட், அம்ருத் திட்டங்களுக்கு ரூ2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைத் தொடர்ந்து அம்ருத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய அளவில் 500 நகரங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் கோடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அம்ருத் திட்டம் அமலாக்கப்பட்டால், நகர்ப்புறங்களில் மின் ஆளுமைக்கு அடிப்படையாக அமைந்த கணினிமயமாக்கல் போன்ற சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். குடிநீர் வசதி, மின்சார வசதி போன்றவை முறையாகக் கண்காணிக்கப்படும். குடிமக்களுக்குப் பயன்படும் வகையில் நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்படும் வகையிலான திட்டமிடல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாட்டில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களும் டிஜிட்டலாக மாற்றப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்தார். தற்போது முக்கிய ரயில்நிலையங்களில் மட்டும் உள்ள வை-பை, சிசிடிவி காமிரா வசதி அனைத்து ரயில்நிலையங்களிலும் நிறுவப்படும் என்றும் இதற்காக ஒரு லட்சத்து 48ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் நாடு முழுவதும் கிராமப்புற பகுதிகளில் சுமார் 5 லட்சம் வை-பை ஸ்பாட்டுகள் ஏற்படுத்தப்படும் என்றும் ஜேட்லி கூறினார்.