கல்யாணம் ஆயிருச்சா? இதை பாருங்க.. மாத வருமானத்தை சொல்ல மறுத்த கணவன்.. மனைவி அதிரடி முடிவு!
ஜெய்ப்பூர்: மாத வருமானம் எவ்வளவு என்று கணவன் சொல்ல மறுத்த நிலையில், அவரது மனைவி மத்திய தகவல் ஆணையத்தில் முறையிட்டார். அவருக்கு அங்கு வெற்றி கிடைத்துள்ளது. கணவரின் வருமானத்தை 15 நாட்களுக்கு வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய தகவல் ஆணையம்.
பொதுவாக கணவரின் வருமானம் மனைவிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இதேபோல் மனைவியின் வருமானம் கணருவக்கு தெரியாமல் இருக்காது.
எனினும் விதிவிலக்காக சில வீடுகளில் இருவரும் தங்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு செலவு செய்வதற்காகவும், தன்னுடைய சுயதேவைகளை மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ தெரியாமல் பூர்த்தி செய்வதற்காகவும் வருமானத்தை மறைக்கிறார்கள்.
அதிரடி காட்டிய மனைவி
அப்படித்தான் ராஜஸ்தானைச் சேர்ந்த கணவர் ஒருவர் மனைவியிடம் வருமானத்தை மறைத்திருக்கிறார். கேட்டு கேட்டு பாரத்த அவர் ஒரு கட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முறையிட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது.
மனு போட்ட மனைவி
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் ரஹமத் பானு. இவரது கணவர் தன்னுடைய வருமானத்தை பானுவிடம் தெரிவிக்க மறுத்தார். இதனை அடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் பானு, தனது கணவரின் வருமான விவரத்தை தெரிவிக்க வேண்டும் என வருமான வரித்துறையிடம் அவர் கேட்டுள்ளார்.
உரிமை இருக்கிறது
ஆனால் மூன்றாம் நபரிடம் இதுபோன்ற விவரத்தை தெரிவிக்க முடியாது என வருமான வரித்துறை மறுத்துவிட்டது. இதை எதிர்த்து ரஹமத் பானு மத்திய தகவல் ஆணையத்தில் (CIC) மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த மனுவை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையம், RTI சட்டத்தின் கீழ் கணவரின் மொத்த வருமான விவரத்தை தெரிந்துகொள்ள மனைவிக்கு முழு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது.
வெற்றி பெற்ற மனைவி
RTI சட்டத்தின் கீழ் இதுபோன்ற தகவலை மூன்றாம் நபர் கோர முடியாது என்ற வாதத்தை மத்திய தகவல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும் மனுதாரர் கோரிய விவரத்தை இந்த உத்தரவு கிடைத்த 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என ஜோத்பூர் வருமான வரித்துறைக்கு மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டது.