ராஜஸ்தானில் மீண்டும் நூலிழையில் காங்கிரஸ் ஆட்சி? இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா Exit Poll முடிவு!
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 86 தொகுதிகளில் இருந்து 106 தொகுதிகள் வரை வெற்றிபெறக் கூடும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானை பொறுத்தவரை மொத்தம் 200 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 101 இடங்கள் இருந்தால் போதுமானது.
ராஜஸ்தானில் கரண்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மித் இறந்துவிட்டதால் அந்த தொகுதியை தவிர்த்து 199 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. அதன்படி ஆட்சியமைக்க தற்போதைய சூழலில் 100 இடங்கள் வென்றாலே போதுமானது. அந்த வகையில் பாஜகவும், காங்கிரசும் சரிசமமான பலத்துடன் மோதக் கூடும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதே போல் பாஜகவுக்கு ராஜஸ்தானில் 80 தொகுதிகள் முதல் 100 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதை வைத்து பார்க்கும் போது போட்டி மிகக் கடுமையாக இருக்கக் கூடும் எனத் தெரிய வருகிறது. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மல்லுக்கட்டுவது இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவின் மூலம் தெரிய வருகிறது.
காங்கிரஸ், பாஜக அல்லாமல் இதர சிலர் 9 தொகுதிகளில் இருந்து 18 தொகுதிகள் வரை வெற்றிபெறவும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ராஜஸ்தானில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அது நூலிழையில் பெற்ற வெற்றியாகத் தான் இருக்கும் என்பதை இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜான்கி பாத், டிவி 9, ரிபப்ளிக், பி மார்க் உள்ளிட்ட இன்னும் பல முன்னணி நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் ராஜஸ்தானில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தானில் பாஜகவை விட காங்கிரஸ் ஐந்தாறு தொகுதிகள் கூடுதலாக வெற்றி பெறலாம் எனக் கூறி இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவு ட்விஸ்ட் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications