ராஜஸ்தானில் மனைவியை அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற குடிகார கணவன்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 40 வயது பெண் ஒருவரை அவரது கணவர் அடித்து அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள தந்தரம்காரைச் சேர்ந்தவர் கேசர் சிங்(47). விவசாயி. அவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள அவர் குடித்துவிட்டு தனது 40 வயது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிங் தனது மனைவியை அடித்து நொறுக்கி சந்தையில் அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் நடந்த இடத்தில் அவர்களின் மகளும் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கேசர் சிங்கை கைது செய்தனர்.
முன்னதாக கடந்த வாரம் ராஜஸ்தானின் ராஜசமந்த் மாவட்டத்தில் உள்ள துராவட் கிராமத்தில் பெண் ஒருவர் மீது கொலைப்பழி சுமத்தி அவரை நிர்வாணமாக்கி முகத்தில் கரியை பூசி கழுதை மேல் அமர வைத்து ஊர்வலமாக கொண்டு சென்ற அவலம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.