நல்ல தலைமைக்கு ஏங்கும் 7 கோடி தமிழர்களை ரஜினி ஏமாற்றமாட்டார்... நண்பர் ராஜ்பகதூர் நம்பிக்கை
கடவுள் ஆணையிட்டால் அரசியலுக்கு வருவேன் என்று கூறியதில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், அவரை நம்பியுள்ள 7 கோடி தமிழர்களை அவர் கைவிட மாட்டார் என்று தான் நம்புவதாக அவரது நண்பர் ராஜ் பகதூர் தெரிவித்தார்.
பெங்களூர்: தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளதாக கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த், நல்ல தலைமைக்கு ஏங்கும் 7 கோடி தமிழர்களை கைவிட மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ் பகதூர் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாள்களுக்கு பிறகு கடந்த திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கோடம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய கல்யாண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் முதல்நாளான திங்கள்கிழமை பேசிய அவர், நான் நடிகன் ஆகவேண்டும் என்று கடவுள் விரும்பியதால் நடிகனாகி உங்களை மகிழ்வித்து வருகிறேன். நாளை நான் வேறு என்னவாக வேண்டும் என்று கடவுள் நினைக்கிறாரோ அதன்படி நடப்பேன். ஆனால் பணத்தாசை பிடித்தவர்களை நான் என்றுமே கூட்டு சேர்க்க மாட்டேன் என்றார் அவர்.

பெரிய ஸ்டார்
கடந்த 1970-களில் ரஜினிகாந்த் பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்த போது ராஜ் பகதூர் என்பவர் டிரைவராக இருந்தார். பின்னர் ரஜினிகாந்த் பெரிய நடிகனாகி விட்ட போதிலும் நட்பை மறக்காமல் பெங்களூர் செல்லும் போதெல்லாம் வித்தியாசம் பார்க்காமல் தனது நண்பர்களை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

நம்பிக்கை வீண்போகாது
ரஜினிகாந்த் திரைப்படக் கல்லூரியில் சேர காரணமாக இருந்தவரும், ரஜினியின் நண்பருமான ராஜ் பகதூர் கூறுகையில், இந்த மாத தொடக்கத்தில் ரஜினி, பெங்களூரில் உள்ள திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மிகவும் டென்ஷனாக இருந்தார்.

இதுவரை பார்த்ததில்லை
அது போல் டென்ஷனாக இருந்த ரஜினியை நான் இதுவரை பார்த்ததில்லை. அரசியலுக்கு வருவதா? வேண்டாமா? என்ற மனநிலையில் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார். அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழக மக்களை நல்ல வழியில் நடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினி வேதனை
தமிழக மக்களின் வேதனை குறித்து அவர் தனது வேதனையையும், கவலையையும் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் நிலவும் சூழலை வைத்து ரஜினி உடனடியாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகின்றனர். நானும் அதையே விரும்புகிறேன். அவர் புதிய கட்சி தொடங்க வேண்டும்.

பாபா அருள்புரியட்டும்
தற்போது ரசிகர்களுடனான சந்திப்பின்போது கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார் என்று ரஜினி காந்த் கூறியுள்ளதால் அவர் வணங்கும் பாபாஜி அவருக்கு அருள்புரிய வேண்டும். அவர் சூசகமாக வெளியிட்டுள்ள கருத்தை வைத்துப் பார்க்கும்போது, 7 கோடி தமிழ் மக்களை அவர் ஏமாற்ற மாட்டார் என்றே நினைக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications