சட்டப்பிரிவை நீக்க கோரும் நளினி வழக்கு... பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்த வழக்கில் மத்திய உள்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தனு உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்தவழக்கில் நளினிக்கு முதலில் தூக்குத்தண்டனை கொடுக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஆயுள்தண்டனை கைதிகள் நீண்ட காலம் சிறையில் இருப்பதாலும், வழக்கு தாமதம் ஏற்பட்டதாலும் அவர்களை அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கில் தீர்ப்பு கூறினார்கள்.
இதன் அடிப்படையில் நளினி உள்பட பலபேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. இந்தமனு மீதான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நளினி ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில் குற்றவாளியை விடுவிக்க மத்திய அரசிடம் கருத்து கேட்கும்படி 435 (1ஏ) சட்டப்பிரிவு கூறுகிறது என்று சுட்டிக் காட்டியிருந்தார். மேலும், 435 (1ஏ) சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்றும், சி.பி.ஐ. வழக்குகளில் குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications