ஏன் விமான விபத்துக்களில் விஐபிக்கள் சாவதில்லை?... ராஜ்நாத் சிங்கை அதிர வைத்த எஸ்ஐ மகள்
டெல்லி: பழைய விமானங்களைத் தூக்கிப் போடாமல் ஏன் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைப் பார்த்து எல்லைப் பாதுகாப்புப் படை விமான விபத்தில் பலியான சப் இன்ஸ்பெக்டரின் மகள் கேட்டபோது அதற்குப் பதிலளிக்க முடியாமல் திணறினார் ராஜ்நாத் சிங்.
டெல்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டர் ரபீந்தர் குமாரின் மகள் அமைச்சர் ராஜ்நாத் சிங்கைப் பார்த்துக் கேட்ட கேள்விகள் அவரை உலுக்கி விட்டது.
கண்ணீர் மல்க அவர் ராஜ்நாத் சிங்கிடம் பேசுகையில், எனக்கு இதற்குப் பதில் சொல்லுங்கள். ஏன் இதுபோன்ற விபத்துக்களில் வீரர்கள் மட்டும் பலியாகிறார்கள். விஐபிக்கள் யாருமே சாவதில்லையே. ஏன் பழைய விமானங்களையே தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள். இன்னும் எத்தனை உயிரைப் பலி கொடுக்கப் போகிறீர்கள் என்று சரமாரியாக அவர் கேட்டபோது ராஜ்நாத் சிங்கால் பதில் சொல்ல முடியவில்லை.
அவரைப் போலவே உறவினர்கள் பலரும் ராஜ்நாத் சிங்கைச் சூழ்ந்து கொண்டு இன்னும் எத்தனை உயிரைப் பலி கொடுக்கப் போகிறீர்கள் என்று சரமாரியாக கோபத்துடன் கேட்டனர். அவர்களை அமைச்சர் அமைதிப்படுத்தி ஆறுதல் கூறினார்.
உறவினர்களின் சோகத்தைப் பார்த்து ராஜ்நாத் சிங்குக்கும் கண்ணில் நீர் ததும்பியது. உங்களது குறைகளை அரசு நிச்சயம் பரிவுடன் பரிசீலிக்கும். நிச்சயம் தீர்வு காண்போம் என்றார் அவர்.
இந்த விபத்தில் பலியான கோ பைலட் ராஜேஷ் ஷிவ்நரைனின் மாமனார் கூறுகையில், எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள விமானங்கள் அனைத்துமே மிக மிக பழையவை என்று எனது மருமகன் கூறுவார். ஏன் இப்படி பழைய விமானங்களைத் தொடர்ந்து இந்த நாடு பயன்படுத்தி வருகிறது என்று தெரியவில்லை என்றார் கோபத்துடன்.
ஆனால் விபத்தில் சிக்கிய விமானம் பறக்கும் தகுதியுடன்தான் இருந்ததாக சப்பைக் கட்டு கட்டியுள்ளார் எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் டிகே பதக்.












Click it and Unblock the Notifications