பெரிய மாநிலமான உ.பியில் பலாத்காரம் இயல்பானதுதான்: சமாஜ்வாடி தலைவர் பேச்சால் புது சர்ச்சை
லக்னோ: உத்தரபிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் நடப்பது இயல்பானதுதான் என்று ஆளும் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மோசின் கான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமாஜ்வாடி தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களால் நொந்துபோயுள்ள உ.பி மக்கள் இவரது பேச்சால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், வாயில் ஆசிட் ஊற்றி பெண் கொல்லப்பட்டார். உச்சகட்டமாக, பெண் நீதிபதியே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
உ.பி.யில் பெண்களுக்கு எதிராக தினம் ஒரு மோசமான சம்பவங்கள் நடப்பதால் பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. உ.பியில் குடியரசு தலைவர் ஆட்சி வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கைவிடுத்து வருகிறது.
ஆனால் ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவோ, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஆண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று கூறியிருந்தார். மாநில முதல்வர் அகிலேஷ் யாதவோ, எல்லா மாநிலத்திலும் இப்படித்தான் நடக்கிறது என்று கூறியிருந்தார்.
சமாஜ்வாடி கட்சியினரின் இந்த பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று அக்கட்சியின் மூத்த தலைவர் மோசின்கான் கூறுகையில், "காதலர்கள் தங்களுக்குள் உடல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டு பிரச்சினை என்று வரும்போது பாலியல் பலாத்காரம் என்று அதை புகாராக அளிக்கிறார்கள்.
இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு உதாரணமாக எடுக்க கூடாது. உத்தரபிரதேசம் மிகப்பெரிய மாநிலம். எனவே பலாத்காரம் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கும். இதில் அரசை குறை கூறவழியில்லை. மீடியாக்கள் நாட்டின் பிற பகுதியில் நடக்கும் சம்பவங்களை மறைத்துவிட்டு உத்தரபிரதேசத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார்.