வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைப்பு.. மணிப்பூரில் 'பூத் கேப்சர்' முயற்சி! இன்று மறு வாக்குப்பதிவு!
இம்பால்: வாக்குப்பதிவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில், மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழ்நாடு (39), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் மிகவும் பதற்றமான மாநிலமாக மணிப்பூர் அறியப்பட்டிருந்தது. மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என இரண்டு தொகுதிகள் இருக்கின்றன. இரண்டு தொகுதிகளுக்கும் ஏப்.19 திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பிற்பகல் சுமார் 2 மணியளவில் துப்பாக்கிகளுடன் வாக்குப்பதிவு மையத்தை நோக்கி வந்த மர்ம நபர்கள், வானத்தை நோக்கி சுட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
பிஷ்னுபூர் மாவட்டத்தின் மொய்ராங் தொகுதிக்கு உட்பட்ட தம்னாபோக்பி என்ற இடத்தில், இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இரண்டு நபர்கள் கையில் நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தியவாறு வாக்குச்சாவடியை நோக்கி ஓடும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், வாக்குச்சாவடியை சுற்றி போலீசார் நின்று கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் மர்ம நபர்களை தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்த சில பெண்கள், காவலர்கள் வெறுமென வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, மர்ம நபர்களை தடுக்க வலியுறுத்துகின்றனர். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது.
மற்றொரு பகுதியான இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள யூரிபோக் மற்றும் இரோயிஷெம்பா கெய்ராவ் ஆகிய இடங்களில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்களை விரட்டியடிக்க முயன்றுள்ளனர். மேலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்காளர்களை கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் மின்னணு வாக்கு பெட்டி இயந்திரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உள் மணிப்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அங்கொம்சா பிமோல் அகோய்ஜாம், போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். மணிப்பூர் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சித்தன. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து கலவரம் நடைபெற்ற 11 வாக்குச்சாவடிகளுக்கு இன்று (ஏப்ரல் 22) மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்தார். மறு தேர்தலின்போது கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications