பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு கட்டணம் 1 ரூபாய்...ஜார்கண்ட் முதல்வர் அதிரடி!
பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் பத்திரப்பதிவு கட்டணம் 1 ரூபாய் மட்டுமே என்று ஜார்கண்ட் மாநில முதல்வர் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்ய கட்டணமாக 1 ருபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரகுபர்தாஸ் அறிவித்துள்ளார்.இது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல்வராகப் பதவியேற்றது முதல் அரசு அலுவலகங்களில் பான் மசாலா தடை, ஊழியர்களின் நேர ஒழுங்கு , பெண்களுக்கு பாலியல் சீண்டல் தருவோரைக் கண்காணிக்க சிறப்பு குழு, பசுக்களுக்கு சிகிச்சை அளிக்க அவசர ஆம்புலன்ஸ் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு நாடுமுழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் மிஞ்சும் வகையில் பாஜகவை சேர்ந்த ஜார்கண்ட் முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளதை மகளிர் அமைப்புகள் வரவேற்றுள்ளனர்.
ஜார்கண்ட் மாநில அரசின் செய்திக்குறிப்பில்," பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு கட்டணம் ரூ.1 மட்டுமே ஆகும். தற்போது சொத்து பதிவு செய்வதற்கு 7 சதவீத பத்திரப்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றது.இந்த அறிவிப்பின் மூலமாக பெண்களின் வளர்ச்சி மேம்படுவதோடு, அவர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்கும். விரைவில் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளிக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications