மதமாற்றம் செய்ய முயன்றதாக கல்லூரி மாணவர்கள் உட்பட 13பேர் கைது!
பெங்களூர்: தாழ்த்தப்பட்ட மக்களை மதம் மாற்றம் செய்ய முயற்சித்த கல்லூரி மாணவர்கள் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம் சிக்கஜாசுரு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு ஹாசன் மாவட்டம் ஆலூர் அருகே உள்ள கட்லூரு கிராமத்தை சேர்ந்த உமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. உமேசின் மனைவி பெயர் பாரதி. உமேஷ் ஆட்டோ டிரைவராக உள்ளார். 3 பேரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கட்லூரு கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை தங்களது மதத்திற்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் 3 பேரும் திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நேற்று ஆனந்த், தன்னுடன் படிக்கும் தனது மதத்தை சேர்ந்தவர்களான மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இசாக்யங், ரோலியான் தாங்க், தோர்சம் குசாங், கோக் சியான் அன்ட், தாங்க் சியான் மவுக், மிசோராம் மாநிலத்தை சேர்ந்த ஜோசார்ட், லால் சியாங் லியான், பாபு கான் சிங், தஞ்சா லியான், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆல்வீன் தால் ஆகியோருடன் கட்லூரு கிராமத்திற்கு வந்தார்.
பின்னர், கல்லூரி மாணவர்கள் உமேஷ்-பாரதி தம்பதியுடன் அந்த கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் சிலரை சந்தித்து தங்களது கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பாரதி அதே கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவரின் வீட்டிற்கு கல்லூரி மாணவர்களை அழைத்து சென்றார்.
அப்போது மோகனின் வீட்டில் இருந்த மற்றொரு மதத்தின் சாமி போட்டோக்களை பார்த்து அவர்கள் அவதூறாக திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கிறிஸ்துவ மதமே உண்மையானது. நீங்கள் எங்களது மதத்திற்கு மாற வேண்டும். இவ்வாறு மாறினால் உங்களுக்கு இலவசமாக ஒரு வீடு கட்டி தருவதாகவும் அவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் போலீசை வரவழைத்துள்ளார். முன்னதாக மதம் மாற்ற வந்த 13 பேரையும் வீட்டின் உள்ளே வைத்து வெளிப்புறமாக பூட்டினார். இந்த நிலையில், மோகனின் வீட்டிற்கு வந்த போலீசார் 13 பேரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications