ஜேபிசி அறிக்கையை நிராகரிக்க கோரி சபாநாயகருக்கு ஆ.ராசா கடிதம்

இது தொடர்பாக மீரா குமாருக்கு ஆ. ராசா நேற்று எழுதியுள்ள கடித விவரம்:
பி.சி. சாக்கோ தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) 2011-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 29-ந் தேதியிட்டு சாக்கோ இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
அதில், சாக்கோவுக்கு நான் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதியிட்டு அனுப்பிய கடிதத்தின் விவரம் பதிவு செய்யப்படாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக 2007 மே முதல் 2010 நவம்பர்வரை நான் இருந்தேன்.
அந்த அடிப்படையில் அலைக்கற்றை கொள்கை, தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்க அரசு கடைப்பிடித்த நடைமுறை, பல்வேறு நிறுவனங்கள், தனி நபர்கள் ஆகியோரின் பங்களிப்பு ஆகியவற்றை விளக்க என்னால் மட்டுமே முடியும். அதனால் எனது சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டும் என பலமுறை ஜேபிசி தலைவர் சாக்கோவுக்கு கோரிக்கை விடுத்தேன்.
ஆனால், அதை அவர் நிராகரித்து விட்டார். இதையடுத்து, எனது தரப்பு நிலையை விளக்கி கடந்த ஏப்ரல் மாதம் சாக்கோவுக்கு கடிதம் எழுதினேன். எனது தரப்பு விளக்கத்தை ஜேபிசி இறுதி அறிக்கையில் பதிவு செய்ய வேண்டும் என அக்குழுவில் உறுப்பினராக இருந்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு இறுதி அறிக்கை தொடர்பான எதிர்ப்புக் கடிதத்தில் வலியுறுத்தினார்.
ஜேபிசியில் அங்கம் வகித்த பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் எனது விளக்கத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாகக் கூறியிருந்தனர். இருப்பினும் எனது கடிதத்தை நிராகரித்து விட்டு சாக்கோ இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
இதன் மூலம், என்னை ஒதுக்கி விட்டு இறுதி அறிக்கை தயாரித்துள்ள சாக்கோவின் நோக்கம் தெளிவாகியுள்ளது. கடந்த 19 மாதங்களாக நடைபெற்ற ஜேபிசி கூட்டத்தின்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் வரிசையில் எனது விளக்க கடிதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஜேபிசி தலைவர் கூறலாம். அதைவிட, உண்மை குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்று அவர் கூறலாம்.
எனவே, சாக்கோ தாக்கல் செய்த இறுதி அறிக்கையை நிராகரிக்க வேண்டும். எனது எழுத்துப்பூர்வ விளக்கத்தை சேர்த்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சாக்கோவுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஆ. ராசா தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications