பள்ளிக்கு செல்ல மறுத்த மகளை பைக்கில் கட்டி அழைத்துச் சென்ற தந்தைக்கு சிறை
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் தேர்வுக்கு செல்ல மறுத்த 8 வயது மகளை தனது பைக்கின் பின்புறத்தில் கயிறால் கட்டி பள்ளிக்கு அழைத்துச் சென்ற தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக இருப்பவர் பகவத் சிங்(40). அவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். தான் குறைவான சம்பளம் வாங்கினாலும் தனது குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும் என்று நினைப்பவர் சிங். இந்நிலையில் அவரது 8 வயது இளைய மகள் தேர்வுக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார்.
சிங் எவ்வளவோ கூறியும் அவரின் மகள் பள்ளிக்கு சென்று தேர்வு எழுத மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். இதையடுத்து சிங் மகளை எப்படியாவது தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று நினைத்தார். உடனே அவர் தனது மகளின் கைகளை கயிறால் கட்டி தனது பைக்கில் பின்னால் அவரை கட்டிவைத்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
வழியில் சிங் செல்வதை பார்த்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீசார் விரைந்து வந்து குழந்தையை பைக்கில் கட்டிவைத்து பள்ளிக்கு அழைத்துச் சென்ற சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே விடப்பட்டார்.
இது குறித்து சிங் கூறுகையில்,
என் மகளை பைக்கில் கட்டி பள்ளிக்கு அழைத்துச் செல்வதால் அவர் ஒன்றும் இறந்துவிட மாட்டார். ஆனால் அவர் படிக்காவிட்டால் நிச்சயம் இறந்துவிடுவார் என்றார்.












Click it and Unblock the Notifications