மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்! பரபர தகவல்
இம்பால்: மணிப்பூரில் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரு இடங்களில் நவீன ஆயுதங்களை கொண்டு அங்கு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூரில் வசிக்கும் குக்கி - மெய்தி குழுக்கள் இடையே கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, வன்முறை வெடித்தது. 2 பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கியது.

மணிப்பூரில் இயல்பு நிலையை மீட்டு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவ்வப்போது திடீரென ஏற்படும் மோதல்களால் அங்கு இயல்பு நிலை இன்னமும் முழுமையாக திரும்பிய பாடில்லை.
இத்தகைய சூழலில் தான், மேற்கு இம்பால் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதி, பயங்கரவாதிகள் டிரோன் மூலம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினார்கள். மெய்தி இனமக்கள் வசிக்கும் 2 கிராமங்களில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியாகினர். குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் நவீன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் விழுந்த இந்த குண்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.
ராக்கெட் குண்டு வீச்சு நடந்த இடத்திற்கு அருகில்தான் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது. குக்கி இனத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் அதி நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் படையினருக்கும் சவாலை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications