200 வாக்குறுதி கொடுத்தீங்களே, என்னாச்சு? ... சந்திரபாபு நாயுடுவை கேட்கும் ரோஜா
ஹைதராபாத்: ஆந்திர மக்களுக்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுவரை எதையும் செய்யவில்லை என்று நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான நடிகை ரோஜா குற்றம்சாட்டி உள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவருமான நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரத்தின்போது 200 வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, தான் ஆட்சிக்கு வந்தால் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். ஆனால், அவர் இதுவரை எதையுமே நிறைவேற்றவில்லை என்றார்.
ஆந்திராவை சந்திரபாபு நாயுடு முதல் மாநிலமாக மாற்றிக்காட்டுவேன் என்றார். ஆனால், அவர் ஊழலில் தான் முதல் இடத்தில் உள்ளார். மது விற்பனையில் ஆந்திரா முதல் இடத்தில் இருக்கிறது. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதாக கூறினார். ஆனால், தெலுங்கானா மேல் சபை தேர்தலில் ஓட்டு போட எம்.எல்.ஏ.வுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சிக்கியதால் அவர் தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக மத்திய அரசிடம் மாநில நலன் பற்றி எதையும் கேட்பதில்லை.
ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க முனிகாம கோட்டி என்ற வாலிபர் தீக்குளித்து இறந்துள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டியதன் அவசியம் சாதாரண மக்களுக்குகூட தெரிகிறது, ஆனால் சந்திரபாபு நாயுடுவுக்கு தெரியவில்லை என்று அதிரடியாக தாக்கியுள்ளார் நடிகை ரோஜா.