தொடரும் ஐ.டி.ரெய்டு.. மும்பை ஏர்போர்ட்டில் பயணியிடம் ரூ.28 லட்சம் புதிய 2000 நோட்டுகள் பறிமுதல்
மும்பை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் புதிய 2000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை: மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார். கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்திலிருந்த அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு அமலுக்கு வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து கருப்பு பணம் பதுக்கியவர்கள் வீடுகளிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் துபாய் செல்லும் பயணியிடம் ரூ28 மதிப்புள்ள புதிய 2000 நோட்டுகள் இருப்பதாக வருமான வரித்துறைக்கும் அமலாக்க பிரிவுக்கும் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மும்பை விமான நிலையத்திற்கு விரைந்து சென்ற வருமான வரித்துறையினர், மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு துபாய் விமானத்திற்காக காத்து இருந்த பயணியிடம் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பயணி ஒருவரிடம் இருந்து ரூ.28 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அவரிடம் பாதுகாப்புதுறை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணம் அவருடையது தானே அல்லது வேறு யாரிடமாவது கொடுப்பதற்கு கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.