காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குற்றம்சாட்டவில்லை: ராகுல் விளக்கம்
டெல்லி: மகாத்மா காந்தி படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அவமதிக்கும் வகையில் பேசவில்லை என உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று கூறவில்லை என்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர் காந்தியின் கொலைக்குப் பொறுப்பு என்றுதான் கூறியதாகவும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள சோனாலி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் 'மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான்' என்று பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தியை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தனது கருத்துக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்காவிட்டால் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று கூறியது.
இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், ராகுல் தரப்பில் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகினார். அவர், தனது வாதத்தில், மகாத்மா காந்தி கொலையை, ஆர்எஸ்எஸ் உடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசவில்லை என குறிப்பிட்டார்.
மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications