கர்நாடக கடற்கரையில் நிர்வாணமாக சுற்றிய ரஷ்ய கடற்படை வீரர்கள்
கார்வார்: ரஷ்ய கடற்படை வீரர்கள் கர்நாடக மாநில கடற்கரையில் நிர்வாணமாக திரிந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய கடற்படைக்கு ரஷ்யா ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற போர்க்கப்பலை கட்டித் தந்துள்ளது. இந்த கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள ஐஎன்எஸ் கதம்பா கடற்படை தளத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த கப்பலை பயன்படுத்துவது குறித்து இந்திய கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க 120 ரஷ்ய கடற்படை வீரர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ரஷ்ய வீரர்களில் சிலர் பொது இடங்களில் மது அருந்தினர். இதை பார்த்த பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்தபோது அவர்கள் எதற்காக புகைப்படம் எடுக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் அவர்களுக்கு வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் நேற்று சுமார் 50 ரஷ்ய வீரர்கள் கார்வார் கடற்கரை அருகே நிர்வாணமாக நீந்தினர். இதை பார்த்த சுற்றுலாப் பயணிகள் செய்வதறியாமல் நெளிந்தனர். இதையடுத்து போலீசார் வந்து கர்நாடக கடற்கரைகளில் நிர்வாணமாக சுற்றக் கூடாது என்று தெரிவித்த பிறகு வீரர்கள் அங்கிருந்து சென்றனர்.
ரஷ்ய வீரர்கள் ஆடையின்றி சுற்றியது உள்ளூர் மக்களை கோபமடைய வைத்தது. அவர்களை குறை கூறி பயனில்லை. அவர்களுக்கு இந்திய கலாச்சாரம் பற்றி கற்றுக் கொடுக்காத இந்திய கடற்படை ஊழியர்களைத் தான் குற்றம் கூற வேண்டும் என்று உள்ளூர்வாசியான பிரேம் நாயக் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications