மாத விலக்கு குறித்து திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் சர்ச்சை பேச்சு.. பேஸ்புக்கில் கொந்தளிப்பு
டெல்லி: சபரி மலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருவாங்கூர் தேவஸ்தான தலைவரைக் கண்டித்து முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஏராளமான பெண்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன், " பெண்கள் தூய்மையாக தான் இருக்கிறார்களா என உறுதி செய்வதற்கான பரிசோதனை செய்யும் கருவி ஏதேனும் கண்டுபிடித்தால்தான் அது சாத்தியம் என்றார்.
அவரது இந்த கருத்துக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இது குறித்து முகநூலில் " மாதவிடாயை சந்தோசமாக அனுபவியுங்கள்" ( Happy to Bleed ) என்ற தலைப்பில், தேவஸ்தானத் தலைவரைக் கண்டித்து நிகிதா ஆசாத் என்பவர் ஒரு பக்கத்தை ஆரம்பித்துள்ளார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது எதிர்ப்புகளை பதிந்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர் கூறும்போது, தேவஸ்தான நிர்வாகியின் இந்தப்பேச்சு, பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நமது சமூகத்தில் பின்பற்றப்படும் பெண்களுக்கான வன்மத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முகநூளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப்பக்கத்தில் நாடு முழுவதும் உள்ள பெண்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் இனைவார்கள் என்று எதிர் பார்க்கிறோம் என்றார்.
கடந்த சனிக்கிழமையன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப்பக்கத்தில், பெண்கள் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியும், மாதவிடாயின்போது எடுக்கப்பட்ட படங்ககளையும், உபயோகப்படுத்திய சேனிட்டரி நேப்கின்களின் படங்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.