ராஜஸ்தான் அரசியல்: சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஹைகோர்ட் தடை
ஜெய்ப்பூர்: சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள தகுதி நீக்கம் செய்ய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் ஒரு தரப்பாக மத்திய அரசையும் உயர்நீதிமன்றம் சேர்த்துக்கொண்டது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். அத்துடன் 19 பேரும் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி அளித்த புகாரை ஏற்று,. கட்சி தாவல் சட்டத்தின் கீழ் இவர்களது பதவியை பறிப்பது தொடர்பாக கடந்த வாரம் சபாநாயகர் சி.பி, ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீஸ்க்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களும் வழக்கு தொடந்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் 19 பேரின் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று சபாநாயகருக்கு உத்தரவிட்டது. இந்த தடையை இன்று வரை நீட்டித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்போவதாக உயர்நீதிமன்றம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து நேற்று முன்தினம் சபாநாயகர் சிபி ஜோஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் பதவி நீக்க நோட்டீஸ் விவகாரத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது. அதற்கு அதிகாரம் கிடையாது. அதனால் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்னதான் உத்தரவு பிறப்பிக்கப்போகிறது என்பதை அறிய சபாநாயகரால் ஒருநாள் காத்திருக்க முடியாதா? அதனால் இன்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ள உத்தரவுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது. இதனால் சச்சின் பைலட் உள்பட 19எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு நோட்டீஸ் வழக்கில, சச்சின் புதிய மனுவை நேற்று தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒரு மனுதாரராக சேர்க்க கோரினார். இவர் வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் 11 மணி நேரத்தில் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications