ஜெ. வீட்டில் வேலை செய்வோரெல்லாம் அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது: சசிகலா புஷ்பா விளாசல்
டெல்லி: முதல்வர் வீட்டில் வேலை செய்வோரெல்லாம் அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது என்று சசிகலா நடராஜன் பற்றி, ராஜ்யசபா எம்.பியும், சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான சசிகலா புஷ்பா ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சசிகலா புஷ்பா கூறியதாவது: பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரசின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோரால் கூட மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க முடியவில்லை.
அப்படியானால் ஜெயலலிதா அதிகாரிகளையும் சந்திக்க முடியாத நிலையில் உள்ளார், அவர்களுக்கு உத்தரவை பிறப்பிக்க முடியாத நிலையில் உள்ளார் என்றுதானே அர்த்தம். அப்படியானால் இப்போது அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பிப்பது யார்.

சசிகலா யார்
முதல்வருடன் மருத்துவமனையிலேயே தங்கியுள்ள, சசிகலா நடராஜன்தான், அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறாரா? எந்த பதவியிலும் இல்லாத ஒரு தனி நபர் எப்படி அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியும். இது ஒன்றும் மன்னராட்சி கிடையாது.. ஜனநாயக நடைமுறையில், தனி நபர்களால் அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக விசாரிக்க வேண்டும்.

சசிகலா சதி அறிந்தவர் ஜெயலலிதா
அதிகாரிகள் சுயமாக செயல்பட முன்வர வேண்டும். யாருடைய கட்டுப்பாட்டிலும் அதிகாரிகள் இருக்க கூடாது. 2011லேயே சசிகலா கும்பல் பற்றி அறிந்துதான் ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேறினார். அந்த கும்பல் சதியை தனி நபராக அப்போது முறியடித்தார் ஜெயலலிதா. அப்படிப்பட்டவருக்கே இன்று உடல் நிலை சரி இல்லை. இப்போது இந்த சதி கும்பலை யார் வெளியே அடித்து விரட்டுவது என்பது தெரியவில்லை. அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த சதியை முறியடிக்கும் பொறுப்பு உள்ளது. மக்களுக்கும் உள்ளது.

உதவி வேலை செய்ய வந்தவர்
அதிமுக தொண்டர்கள் நினைத்தால், சசிகலாவை தூக்கி வெளியே எறிந்துவிடுவார்கள். மீண்டும் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் சசிகலா நடராஜன் வந்தபோது, எனக்கு எந்த அதிகாரமும் வேண்டாம். வீட்டில் உதவி வேலைகள் மட்டும் செய்வேன் என்று சசிகலா நடராஜன், உறுதியளித்திருந்தார். எனவே, ஜெயலலிதா வீட்டில் வேலை செய்வதோடு சசிகலா நடராஜன் நிறுத்திக்கொள்ள வேண்டும். முதல்வர் வீட்டில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகளை கட்டாயப்படுத்த முடியாது.

முதல்வர் மீது அன்பு
முதல்வர் நினைத்திருந்தால் என்னை கைது செய்திருக்கலாம். ஆனால் என்மீது ஜெயலலிதாவுக்கு பாசம் உள்ளது. ஆனால், சசிகலா கும்பல்தான் குடைச்சல் கொடுத்து எனக்கு எதிராக முதல்வரை தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தது. இப்போதும் ஜெயலலிதா மீதான அன்பால்தான் இந்த பேட்டியை நான் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு சசி கலா புஷ்பா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications