வேறு கட்சியில் சேராதவரை சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் "கட்சி சாரா" எம்.பி.
டெல்லி: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா வேறு ஒரு கட்சியில் சேராதவரை ராஜ்யசபாவில் கட்சி சாராத எம்.பி.யாக செயல்பட முடியும் என்கிறது விதிகள்.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 50 எம்.பி.க்களை கொண்டிருந்தது அதிமுக. லோக்சபாவில் 37; ராஜ்யசபாவில் 13 எம்.பிக்கள் இருந்தனர்.
தற்போது அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தம்மை தாக்கியதாக ராஜ்யசபாவில் புகார் தெரிவித்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அக்கட்சி எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா. இதனால் அவர் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் அதிமுகவின் பலம் 12 ஆக குறைந்துவிட்டது. அதே நேரத்தில் தாம் ஒரு போதும் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை எனவும் கூறியிருக்கிறார்.
இதனால் அவரது எம்.பி. பதவி என்னவாகும் என்ற கேள்விகுறி எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி கூறுகையில், சசிகலா புஷ்பா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கட்சி சாரா எம்.பி.யாக ராஜ்யசபா தலைவர் அறிவிக்கலாம்.
வேறு ஒரு கட்சியில் அவர் சேர்ந்தால் மட்டுமே எம்.பி. பதவியை அவர் இழக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications