நேபாளப் பெண்களை சீரழித்த சவுதி அதிகாரி கடுமையாக தண்டிக்க வேண்டும் - மகளிர் அமைப்பு போர்க்கொடி
டெல்லி: டெல்லியில் நேபாள தாய், மகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்த சவுதி அரேபிய தூதரக அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய ஜனநாயக பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு குர்கானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் உள்ளன. இங்கு உள்ள ஒரு வீட்டில் 2 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து 2 பெண்களையும் மீட்டனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் நேபாள நாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் என்பது தெரியவந்தது. இதில் தாய்க்கு 44 வயது, மகளுக்கு 20 வயது. அவர்கள் இருவரையும் சவுதி தூதரக அதிகாரி ஒருவர் வீட்டு வேலைக்காக அழைத்து வந்து, வீட்டில் அடைத்து வைத்து அவரும், அவரது நண்பர்களும் பல முறை பலாத்காரம் செய்து அடித்து, உதைத்து சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான முழு விசாரணை அறிக்கையை போலீசார் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். 2 பெண்களுக்கும் 2 ஆவது முறையாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த விசாரணை அறிக்கை ஒப்படைக்கப்பட்டிருப்பதாக குர்கான் குற்றப்பிரிவு துணை கமிஷனர் கூறினார்.
இதற்கிடையே சவுதி தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "தூதரக அதிகாரியின் வீட்டுக்குள் போலீசார் அத்துமீறி நுழைந்த சம்பவம் தூதரக மரபுகளுக்கு எதிரானது" என கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேபாள பெண்களை பலாத்காரம் செய்த சவுதி தூதரக அதிகாரி மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இந்திய ஜனநாயக பெண்கள் அமைப்பினர் டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தூதரக அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள விதிவிலக்கை நீக்கி அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் தங்களுக்கு நடந்த கொடூரம் குறித்து உருக்கமான பேட்டி அளித்தார். அப்போது அவர், "நான் நேபாளத்தில் இருந்து திரும்பும் போது எனது குடும்பத்தாரிடம் நான் மாதம் மாதம் சம்பள பணத்தை அனுப்புவேன். அதனை வைத்து புதிதாக வீடு கட்டலாம், சொந்தமாக கடை தொடங்கலாம் என்று உறுதி அளித்து வந்தேன்.
நாங்கள் சவுதி அரேபியா சென்றதும் எங்களுக்கு வேலை கொடுத்த சவுதி தூதரக அதிகாரியிடம் சம்பள முன்பணம் தரும்படி கேட்டோம் அவர் அதனை தர மறுத்துவிட்டார். மாறாக 3 மாதங்களுக்கு பிறகே உங்களுக்கு சம்பளம் என்று கூறிவிட்டார். இந்தியா வந்ததும், குர்கானில் உள்ள 5 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் எங்களை அடைத்து வைத்தார்.
அப்போது அவருக்கு மசாஜ் செய்யும் படி வற்புறுத்துவார். பின்னர் எங்களை பல முறை பலாத்காரம் செய்துள்ளார். அவரை பார்க்கவரும் விருந்தினர்கள் வீட்டில் மது அருந்துவார்கள், அவர்களும் எங்களை பல முறை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளனர். வீட்டுக்கு வரும் விருந்தினர்களும் மசாஜ் செய்துவிடும்படி எங்களிடம் கூறுவர். வேறு வழியின்றி நாங்கள் அதனை செய்வோம். அதற்காக அவர்கள் பணம் கொடுப்பார்கள் ஆனால் அதை சவுதி அதிகாரியின் மனைவி எடுத்துக் கொள்வார்" என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் டெல்லி மற்றும் நேபாளத்தில் பெரும் சர்ச்சையையும், பலத்த எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications