2ஜி வழக்கு ரகசிய தகவல் வெளியே கசிகிறதே.. சுப்ரீம் கோர்ட் கவலை! சிறப்பு பெஞ்ச் அமைக்கப்படுகிறது!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மூடி முத்திரையிட்ட உறையில் வழங்கிய தகவல் வெளியே கசிந்து நாளேடுகளில் வெளியானது எப்படி என சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது. மேலும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விவகாரங்களை கவனிக்க சிறப்பு பெஞ்ச் ஒன்றும் அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் முன் கடந்த மாதம் 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கின் நிலவர அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தாக்கல் செய்தார்.
அறிக்கையைத் தாக்கல் செய்ததுடன் அதில் ஒரு குறிப்பிட்ட மட்டும் அவர் வாசித்து காட்டினார். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ.க்கு ஒரு ஆடியோ பதிவு கிடைத்துள்ளது. அதன் நம்பகத்தன்மையை பரிசோதித்து விட்டோம்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு நிறுவனத்தில் பொறுப்பில் உள்ள ஒருவர் வழக்கு தொடர்பாக லஞ்சம் கொடுக்க முன்வந்ததை அது காட்டுகிறது. இதில் தொடர்புடையவர்கள் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 120-பி,193 (தவறான சாட்சியம் அளித்தல்), 201 (ஆதாரங்களை அழித்தல்), 465 (மோசடி), 467 (மதிப்புமிக்க பொருளில் மோசடி), 486 (போலி பொருள் என குறியிடப்பட்டதை விற்பனை செய்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் செய்ததற்கு முகாந்திரம் உள்ளது. ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள 2ஜி குற்றச்சாட்டுகளுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்படும். அதன்மீது விசாரணையும் நடத்தப்படும் என்றார்.
(இந்த நபர் தி.மு.க. எம்.பி. கனிமொழிதான் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது)
ரகசிய தகவல் கசிந்தது எப்படி?
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலிடம், மூடி முத்திரையிடப்பட்ட உறையினுள் உள்ள அறிக்கையில் இடம்பெற்றிருக்கிற ஒரு நபரின் பெயர், சில செய்தித்தாள்களில் வந்தது எப்படி? என கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், நீதிமன்ற அதிகாரிகளிடம் இதுபற்றி நான் கேட்டேன். அவர்களில் ஒருவர் அழுதே விட்டார். எனவே எங்கள் தரப்பில் இது நிகழவில்லை. இந்த சம்பவம் கவலை அளிப்பதாக உள்ளது என தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இப்படி அடிக்கடி நடக்கிறது. இது தொடர்பாக ஒரு விசாரணை நடத்தலாம். வழக்கும் பதிவு செய்யலாம். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை இனி தடுத்து நிறுத்த முடியும் என்றார்.
அதன் பின்னர், "ஸ்பெக்ட்ரம் வழக்கு விவகாரங்களை விசாரிக்க ஏற்ற அமர்வு இது அல்ல. இதுபற்றி விசாரிக்க ஒரு சிறப்பு பெஞ்ச் ஜூலை மாதம் 23-ந்தேதி அமைக்கப்படும் என தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து அறிவித்தார்.












Click it and Unblock the Notifications