பவானிசிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் மனு மீது ஏப். 27-ல் தீர்ப்பு- உச்சநீதிமன்றம்
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்திருந்த மனு மீது வரும் 27-ந் தேதி உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளிக்க உள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தண்டனையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
இம்மேல்முறையீட்டு மனு மீது கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்தினார். இந்த விசாரணையிலும் அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே ஆஜரானார். ஆனால் குற்றவாளிகளான ஜெயலலிதா உள்ளிட்டோருடன் இணைந்து பவானிசிங் செயல்படுகிறார்; அவரை கர்நாடகா அரசு நியமிக்கவில்லை.. இதனால் அவர் அரசு வழக்கறிஞராக ஆஜராகக் கூடாது.. பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோகூர், பானுமதி ஆகியோர் இருவேறுபட்ட தீர்ப்பளித்தனர். பவானிசிங் ஆஜரானதும் சட்டவிரோதம்.. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையே செல்லாது என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி லோகூர்.
ஆனால் பவானிசிங் 'இன்சார்ஜ்' ஆக நியமிக்கப்பட்டவர் என்பதால் மேல்முறையீட்டு வழக்கிலும் அவர் ஆஜராகலாம்.... தவறு இல்லை என்று நீதிபதி பானுமதி தீர்ப்பளித்தார். இதனால் இருவரும் 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு பரிந்துரைத்தனர்.
இதனடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகள் பெஞ்ச் அமைக்கப்பட்டது. இதில் நீதிபதிகள் அகர்வால், பிரபுல்ல சந்திர பந்த் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த பெஞ்ச் நேற்று விசாரணையைத் தொடங்கியது. அப்போது அன்பழகன் வழக்கறிஞர் அந்தியர்ஜுனா, ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனர். நீதிபதிகளும் குறுக்கிட்டு சில விளக்கங்களைக் கேட்டுப் பெற்றனர்.
இந்நிலையில் 2வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் வரும் 27-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications