காவிரி வழக்கில் தமிழகத்திற்கு எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது : அமைச்சர் சி வி சண்முகம்
காவிரி வழக்கில் தமிழகத்திற்கு எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது என்று அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி : காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் தமிழக மக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில், மத்திய அரசு சமர்பித்த திட்ட வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது. மேலும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்கவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில், கர்நாடக அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்த உச்ச நீதிமன்றம் ஜூன் மாதத்திற்குள் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவிக்கையில், காவிரி வழக்கில் தமிழக மக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலும், தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.