சொத்து குவிப்பு வழக்கு: ஹிமாச்சல் முதல்வர் வீரபத்ரசிங்குக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
சிம்லா: ஊழல் வழக்கில் ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கை கைது செய்ய அந்த மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த 2 மனுக்கள் குறித்து பதிலளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ஹிமாச்சல பிரதேச முதல்வரான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீரபத்ர சிங், அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக சிபிஐ அண்மையில் வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்துகளை வாங்கிக் குவித்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ.யின் நடவடிக்கையை எதிர்த்து ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் வீரபத்ரசிங் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரையும், அவரது மனைவியையும் கைது செய்யவும், அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தடை விதித்து கடந்த 1-ந் தேதி உத்தரவிட்டது.
இந்த தடையை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கை கைது செய்யவும், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது; இதனால் அவரிடம் விசாரணை நடத்த முடியாத நிலை நேரிட்டிருப்பதால் வழக்கில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
சி.பி.ஐ. தாக்கல் செய்த இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கலிஃபுல்லா, யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த மனுக்கள் குறித்த பதிலளிக்கும்படி, ஹிமாச்சல பிரதேச மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications