2ஜி: குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி கனிமொழி மனு- சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி கனிமொழி எம்.பி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பதிலளிக்கக் கோரி சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
2ஜி வழக்கு விசாரணையை முன்கூட்டியே விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரி கனிமொழி தாக்கல் செய்துள்ள மற்றொரு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செப்டம்பர் 2ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

2 ஜி வழக்கு விசாரணை
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
ரத்து செய்ய மனு
இந்த நிலையில் கனிமொழி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
ஆகஸ்ட் 27க்கு ஒத்திவைப்பு
இதுதொடர்பாக பதிலளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஆகஸ்டு 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
வழக்கை விரைந்து முடிக்க
இந்த நிலையில் கனிமொழி புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கு விசாரணையை முன்கூட்டியே விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
உச்சநீதிமன்றம் விசாரணை
இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல்.தத்து, பினாகி சந்திரகோஷ் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடந்தது.
3 வாரங்களுக்குள் பதில்
விசாரணை தொடங்கியதும், இந்த மனு மீதான பதில் மனுவை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு எதிர்தரப்பு மனுதாரர் பிரசாந்த் பூஷன் மற்றும் சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை செப்டம்பர் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சிறப்பு வழக்கறிஞர் தேர்வு
இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞர் யு.யு.லலித் நீதிபதியாக உள்ளதால், புதிதாக அந்த பணிக்கு நியமிக்கப்பட வேண்டிய சிறப்பு வழக்கறிஞரைத் தேர்வு செய்ய 3 பேர் பெயர் கொண்ட பட்டியலை அனுப்பி வைக்குமாறு சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications